நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 4 மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை, புதுப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் ஜெகன், ராமகிருஷ்ணன், செந்தில், சாமுவேல் ஆகிய 4 பேரும் விசைப்படகுகள் மூலம் உரிய அனுமதி பெற்று புதன்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
மீனவர்கள் 4 பேரும் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளைர்கள் 4 மீனவர்களையும் அரிவாள், கல், கட்டை கொண்டு தாக்கியுள்ளனர். மேலும், கடலுக்குள் தள்ளிவிட்டு சித்ரவதை செய்துள்ளனர். விசைப் படகில் இருந்த வலைகள், ஜிபிஎஸ் கருவிகள், செல்போன்கள் ஆகியவற்றையும் பறித்துச் சென்றனர்.
இந்நிலையில், இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த மீனவர்கள் கரை திரும்பிய நிலையில், அவர்கள் 4 பேரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் தொடர்வது மீனவர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.