fbpx

’ஸ்டார் 2.0’ திட்டம்..!! இனி கட்டணமே வேண்டாம்..!! பத்திரப் பதிவுத்துறை அதிரடி அறிவிப்பு..!!

1975 முதல் தற்போது வரையிலான காலத்திற்குரிய பதிவேடு ஏற்கனவே கணினிமயமாக்கப்பட்டுள்ள நிலையில், 1950 – 1974 வரையிலான பதிவேடுகளை கணினியில் மேலேற்றம் செய்வதற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பத்திரப்பதிவு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

குறிப்பிட்ட காலத்துக்குள் வருமான வரி இணையதளத்தில் உரிய விவரங்களைப் பதிவேற்றம் செய்யாத சார் பதிவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவுத்துறை தலைவர் தெரிவித்திருந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு, இது தொடர்பாக பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஒரு அறிக்கையும் வெளியிட்டிருந்தார். அதில், “ஒவ்வொரு நிதியாண்டு முடிவடைந்ததும், ரூ.30 லட்சத்துக்கு மேலான விற்பனை ஆவணங்கள், விற்பவர், வாங்குபவர், ஆதார் எண், பான் எண், சொத்தின் தன்மை, சொத்தின் மதிப்பு உள்ளிட்ட விவரங்களுடன் பதிவு அலுவலர்களால், வருமான வரித் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். ஒவ்வோரு ஆண்டும் இந்த விவரங்கள் தவறாது பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு பதிவேற்றம் செய்யத் தேவையான தகவல்களை, ஆவணம் பதிவு செய்ய முன்பதிவு செய்யும் முன்பே, ஆவணதாரர்களிடமிருந்து பெறும் வகையில் பதிவுத் துறையின் ஸ்டார் 2.0 மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூ.10 லட்சத்துக்கும் மேற்பட்ட விற்பனை ஆவணங்கள் பதிவுக்கு வரும் நிலையில், விற்பவர் மற்றும் வாங்குபவரிடமிருந்து பான் எண் பெறப்படுகிறது. ஆதாருடன் பான் எண் இணைக்கப்பட்டுள்ளதால், பதிவு தொடர்பான தகவல்கள் அனைத்தும் வருமான வரித்துறைக்கு வழங்கும் வகையில், பதிவுத் துறை மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருச்சி உறையூர் சார் பதிவாளர் அலுவலகம், திருவள்ளூர் செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு கடந்த 4ஆம் தேதி வந்த வருமான வரித்துறையினரிடம், 2017-2018ஆம் நிதியாண்டில் இருந்து பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் விவரங்கள் வழங்கப்பட்டன. தேவையான தகவல்களை சரிபார்க்கவும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. இவ்விரு அலுவலகங்கள் குறித்தும் கூடுதல் விவரங்கள், வருமான வரித்துறையால், அந்தந்த சார் பதிவாளர்களிடம் கோரப்பட்டுள்ளது.
இந்த விவரங்கள் விரைவில் வருமான வரித்துறைக்கு அனுப்பப்படும். உரிய காலத்திற்குள் விவரங்களை பதிவேற்றம் செய்யாத இந்த இரு அலுவலகங்களின் சார் பதிவாளர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து சார் பதிவாளர்களும் 61-A விவரங்களை வருமான வரித்துறையின் இணையதளத்தில் உரியகாலத்திற்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கண்டிப்பான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் மற்றொரு செய்திக்குறிப்பினை வெளியிட்டுள்ளார். அதில், பதிவுத்துறையில் முன்னோடி திட்டமாக 06.02.2000 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட “ஸ்டார்” திட்டம் 2018 முதல் புதிய பரிணாமத்தில் “ஸ்டார் 2.0” திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு பதிவுத்துறையில் அனைத்து சேவைகளும் இணையதளம் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. 1975 முதல் தற்போது வரையிலான காலத்திற்குரிய அட்டவணை-II பதிவேடு கணினிமயமாக்கப்பட்டு வில்லங்க சான்றுகளை இணையவழியில் பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.

பொதுமக்கள் 2021-2022-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் இந்த வசதி, 01.01.1950 முதல் பதியப்பட்ட அனைத்து ஆவணங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க 01.01.1950 முதல் 31.12.1974 வரையிலான காலத்திற்குரிய வில்லங்கச் சான்றுகளை இணைய வழியில் பொதுமக்கள் பார்வையிடவும் மற்றும் பதிவிறக்கம் செய்ய ஏதுவாகவும் மேற்கண்ட காலத்திற்கான அட்டவணை-II பதிவேட்டினை ரூ.36.58 கோடி மதிப்பீட்டில் கணினியில் மேலேற்றம் செய்வதற்கு நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணி முடிவடைந்தவுடன், 1950 முதல் இன்றைய நாள் வரையிலான வில்லங்க சான்றுகளை பொதுமக்கள் இணையதள வாயிலாக பார்வையிடவும். அதன் பிரதிகளை கட்டணம் ஏதுமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளவும் இயலும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

ஜெயிலர் படத்தின் மூன்றாவது பாடல் ஜுஜுபி வெளியீடு..!

Thu Jul 27 , 2023
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. ரஜினிகாந்தின் 169 ஆவது படமாக இது உருவாகியுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்தில் மோகன்லால், ஷிவ் ராஜ்குமார், ஜாக்கி ஜெராஃப், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாடலான ‘காவாலா’, இரண்டாம் பாடலான ‘ஹுக்கும்’ ஆகிய பாடல்கள் யூட்யூப் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு […]

You May Like