சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவில் நவீன தொழில்நுட்பங்களை செயல்படுத்தும் விதமாக ஸ்டார் 3.0 திட்டத்தை அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு.
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் டாக்டர். கலைஞர் அவர்களால் பதிவுத்துறையில் முன்னோடித் திட்டமாக 06.02.2000 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஸ்டார்’ திட்டம் தற்போது பல்வேறு பரிணாம வளர்ச்சிகள் அடைந்து கணினிமயமாக்கலில் பதிவுத்துறையை ஒரு முன்னோடியாகத் திகழ வைத்துள்ளது.
பதிவுத்துறையில் வழங்கப்பட்டு வரும் அனைத்து சேவைகளும் இணையதள அமைப்பிலான “ஸ்டார் 2.0′ திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. பதிவுத்துறையின் கணினிமயமாக்கல் முதலமைச்சர் அவர்களின் உத்திரவின்படி, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
தற்போதுள்ள “ஸ்டார் 2.0” திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சேவைகளில் செயற்கை நுண்ணறிவு (AI), மெஷின் லேர்னிங், பெருந்தரவு பகுப்பாய்வு முதலான மேம்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப உத்திகளை உட்புகுத்துதல், சான்றிட்ட நகல் மற்றும் வில்லங்க சான்று முதலான சேவைகளை தானியங்கி முறையில் தன்னிச்சையாக தயாரித்தல் முதலான பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப திட்டங்களைச் செயல்படுத்தும் விதமாக ரூ.32.345 கோடி செலவில் “ஸ்டார் 3.0” திட்டம் அடுத்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.