பொதுவாக அறியப்பட்ட பசுந்தேயிலைப் பொருளைப் பயன்படுத்தி நுண்கிருமிகளை செயலிழக்கச் செய்யும் புதிய காற்று வடிப்பான் உருவாக்கப்பட்டுள்ளது. அசுத்தமான காற்று நமது வாழ்நாளைக் குறைக்கிறது. காற்றில் ஏற்படும் மாசு காரணமாக, இந்தியர்கள் தங்களின் வாழ்நாளில் 5 – 10 ஆண்டுகளை இழக்கிறார்கள். காற்றில் ஏற்படும் மாசு மூச்சுத்திணறல் நோய்க்கு வழிவகுக்கிறது.
இது, உடல் நலத்தையும் மன நலத்தையும் பாதிப்பதாக சிக்காகோ பல்கலைக்கழக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. பொதுவாகப் பசுந்தேயிலையில் காணப்படும் பாலிபினால்ஸ், பாலிகேட்டியானிக், பாலிமெர்கள் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி நுண்கிருமிகளை செயலிழக்கச் செய்யும் புதிய Air filtration பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் சூரியசாரதி போஸ், பேராசிரியர் கெளசிக் சட்டர்ஜி தலைமையிலான ஆய்வுக்குழு உருவாக்கியுள்ளது.இந்தப் புதிய நுண்கிருமி எதிர்ப்பு காற்று வடிப்பான்கள் சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தால் பரிசோதிக்கப்பட்டது.

இது (சார்ஸ் – கொவ்-2) உருமாறிய கொரோனா வைரஸ்களை 99.24% திறனுடன் செயலிழக்கச் செய்வது கண்டறியப்பட்டது. மேலும் வணிகப் பயன்பாட்டுக்காக இந்தத் தொழில்நுட்பம் ஏஐஆர்டிஎச் என்ற புத்தொழில் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான காப்புரிமை 2022-ல் வழங்கப்பட்டுள்ளது. காற்று மாசிற்கு எதிரான போராட்டத்திலும் கொரோனாவைரஸ் போன்ற காற்றுவழி பரவும் நுண்கிருமிகளைக் கட்டுப்படுத்துவதிலும் இந்தக் காற்று வடிப்பான்கள் முக்கியப் பங்கு வகிக்கும்.