‘மாண்டஸ்’ புயல் கரையை கடக்கும் போது என்னென்ன செய்யக்கூடாது என்பதனை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ‘மாண்டஸ்’ புயலாக வலுப்பெற்றது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல், புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே நாளை கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. புயல் காரணமாக, மழை மட்டுமல்லாது, கரையை கடக்கும் பகுதிகளை ஒட்டி சூறாவளி காற்றும் வீச வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் நாளை மறுதினம் வரை தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், அதிலும் குறிப்பாக இன்று மாலை முதல் நாளை மாலை வரையில் தமிழகத்தின் வடகடலோர பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வரையிலான வேகத்திலும், நாளை மாலை முதல் நாளை மறுதினம் காலை வரையில் மணிக்கு 70 கி.மீ. முதல் 80 கி.மீ. வரையிலான வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயல் கரையை கடக்கும் நேரத்தில் என்னென்ன செய்யக்கூடாது…?
1. புயல் வரும் சமயத்தில் குறிப்பாக கடற்கரைப் பகுதிகளுக்கு, சென்று வீடியோ எடுப்பது, செல்ஃபி எடுப்பது போன்றவற்றில் ஈடுபடக் கூடாது.
2. வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும். வீட்டின் கதவோ, ஜன்னல் கதவோ நல்ல நிலையில் இல்லாவிட்டால், அதை உடனடியாக சரி செய்துகொள்வது நல்லது.
3. காற்றின் அழுத்தத்தால் ஜன்னல் கண்ணாடிகள் விரிசல் ஏற்பட்டு உடையவோ, உடைந்து சிதறவோ வாய்ப்புண்டு. மரப்பலகை, துணி ஏதேனும் வைத்து ஜன்னலை மூடிக்கொள்ளுங்கள். கண்ணாடித் துண்டுகள் காற்றின் வேகத்தில் வீட்டுக்குள் சிதறுவதை அது தடுக்கும்.
4. சிதிலமடைந்த கட்டிடங்கள் மற்றும் பழைய கட்டடங்களுக்கு உள்ளேயோ அருகிலேயோ இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
5. பலத்த காற்றின் காரணமாக மின் இணைப்பு துண்டிப்பு ஏற்படலாம். எனவே டார்ச் லைட், பவர் பேங்க், மெழுகுவர்த்தி, இன்வர்ட்டர் போன்றவற்றை தயார் செய்து வைத்துக்கொள்வது பாதுகாப்பானது.
6. பலத்த மழையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. முன்னெச்சரிக்கையாக காய்கறிகள், உணவுப்பொருட்கள் மற்றும் மருந்துகளை ஓரிரு நாட்களுக்கு தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
7. உங்கள் பகுதியில் உள்ள அரசு மற்றும் தொண்டூழிய அமைப்புகளின் உதவி எண்களைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
8. மின்சாரம் இல்லாமல் போனால், தொலைக்காட்சி செய்திகளை எல்லோரும் பார்க்க முடியாது. செல்பேசியே தகவல்களை பெற வழியாக இருக்கும். பேட்டரியில் இயங்கும் பழைய டிரான்சிஸ்டர் இருந்தாலும் அது உதவியாக இருக்கும். அதனால் சமூக ஊடகங்களில் வரும் அனைத்து தகவல்களையும் நம்பி விடாமல், போலிச் செய்திகள் குறித்து கவனமாக இருங்கள்.
9. புயல் கரையைக் கடக்கும்போது பொதுமக்கள் வெளியே நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும். வேறு வழியில்லாமல் வெளியே செல்ல நேர்ந்தால் கவனமாக இருக்கவும். இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் கவனம் தேவை.
10. கனமழையும் புயலுடன் சேர்ந்து வரும். தாழ்வான பகுதிகளில் உங்கள் வீடு இருந்தால், விலைமதிப்புள்ள பொருட்களையும் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை பத்திரப்படுத்திவிட்டு, நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு செல்வது நல்லது.