காய்கறி மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
தென்மேற்கு பருவமழை எதிரொளியாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காய்கறி சந்தைகளுக்கு வர வேண்டிய சரக்கு லாரிகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால், காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒரு கிலோ தக்காளி கடந்த சில நாட்களாக ரூ.100-ஐ கடந்து விற்பனை ஆகிறது.
அதனைத் தொடர்ந்து தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு ரேசன் கடைகளில் தக்காளி விற்பனையை தொடங்கியது. அங்கு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், தக்காளி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு குறித்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் நடத்தினார்.
இந்த கூட்டத்தில் காய்கறி மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நியாயவிலைக் கடைகள், உழவர் சந்தையில் குறைந்த விலையில் தக்காளி விற்பனையை அதிகரிக்க முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆலோசனைக்கு பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உணவு வாணிப கழகத்தின் மூலம் பொருட்களை கொள்முதல் செய்யலாம். மேலும், உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் கொள்முதல்களை மேற்கொள்ளலாம். அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்படுபவதை கடுமையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்கறிகள் விலை உயர்ந்தாலும் அதன் பலன் விவசாயிகளுக்கு நேரடியாக செல்லவில்லை. விவசாயிகளுக்கு நேரடியாக பலன் சென்று சேர வேளாண்மைத்துறை தனி கவனம் செலுத்த வேண்டும்” என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.