சென்னையில் பள்ளி மாணவன் கடத்தப்பட்டதாக அளிக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, தேர்வுக்கு பயந்து மாணவனே கடத்தல் நாடகமாடியிருப்பது போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
சென்னை கொண்டித்தோப்பை சேர்ந்த அரவிந்த் ஷர்மா என்பவர் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது 12 வயது மகன் மிதிலேஷ் குமார், கீழ்பாக்கம் தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருவதாகவும், அவரை வழக்கம் போல ஆட்டோவில் அழைத்து வரும் ஓட்டுநர், பள்ளி வளாகத்துக்குள் சென்ற நேரத்தில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மிதிலேஷை தாக்கி ஆட்டோவில் கடத்திச் சென்றதாகவும் தெரிவித்திருந்தார்.

பச்சையப்பன் கல்லூரி சிக்னல் அருகே ஆட்டோ வந்தபோது மிதிலேஷ் குமார் குதித்து தப்பி, மெட்ரோ ரயில் மூலம் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து, காவலர் ஒருவரிடம் செல்போனை வாங்கி தனது தாத்தாவிற்கு கடத்தப்பட்டது குறித்து தகவல் கொடுத்ததாகவும், தற்போது உடல்நிலை சரியில்லாமல் மிதிலேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ள அரவிந்த் ஷர்மா, சிறுவனை கடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருந்தார்.

புகாரின் அடிப்படையில், சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் அனைத்தையும் போலீசார் ஆய்வு செய்தபோது, சிறுவன் கடத்தப்பட்டதற்கான தடயம் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த போலீசார் சிறுவனை அழைத்து, விசாரணை நடத்தியதில், அரையாண்டு தேர்வுக்கு பயந்து பலமுறை பள்ளிக்கு செல்லமாட்டேன் என பெற்றோரிடம் தெரிவித்ததாகவும், ஆனால் இதை பொருட்படுத்தாமல் பள்ளிக்கு அனுப்பி வந்ததாகவும், எனவே கடத்தல் நாடகமாடினால் பள்ளிக்கு அனுப்பமாட்டார்கள் என திட்டம்போட்டு, பள்ளி முடிந்த பின்பு ஆட்டோவில் ஏறாமல் பேருந்து மூலமாக பச்சையப்பன் கல்லூரி சிக்னலுக்கு சென்று, பின்பு அங்கிருந்து மெட்ரோ ரயில் மூலம் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து, அங்கிருந்த பயணி ஒருவரிடம் செல்போன் வாங்கி தாத்தாவிடம் பேசியதாக கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அந்த சிறுவனை எச்சரித்து அறிவுரை வழங்கி, அவனுடைய பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.