அண்மையில் காய்த்ரி ரகுராம் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நிலையில், தற்போது நடிகை கௌதமி மற்றும் பாஜக தென் மாநில சிறுபான்மை அணி பொறுப்பாளர் பாத்திமா அலி ஆகியோரும் அதிமுகவில் இணைந்துள்ளனர்.
பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தும் தனக்கு கட்சியில் ஆதரவு இல்லை எனக்கூறி, நடிகை கவுதமி அக்கட்சியில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் விலகினார். இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடிகை கவுதமி இன்று அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு நடிகை கவுதமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, மக்களுக்காக பணி செய்வதற்கு சரியான இடம் அ.தி.மு.க.தான் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது. சுமார் 25 ஆண்டுகளாக பா.ஜ.க.வில் இருந்த நான், சில நாட்களுக்கு முன்பு ஒருசில காரணங்களுக்காக அக்கட்சியில் இருந்து விலகினேன். ஆனால் நல்ல காரணங்களுக்காகவும், சரியான காரணங்களுக்காகவும், சரியான நேரத்தில் இன்று அ.தி.மு.க.வில் இணைந்துள்ளேன். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
ஒரு பொறுப்பை ஏற்றுக்கொண்டால் நான் இறங்கி வேலை செய்வேன் என்பது உங்களுக்குத் தெரியும். இதுவரை அரசியலில் எனது செயல்பாடு அவ்வாறுதான் இருந்துள்ளது. இனிமேல் இன்னும் தீவிரமாக பணியாற்றுவதற்கு ஒரு சரியான இடம் எனக்கு கிடைத்துள்ளது என நம்புகிறேன் என்று நடிகை கவுதமி தெரிவித்தார். முன்னதாக அண்மையில், பாஜகவில் இருந்து விலகியிருந்த நடிகை காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்தார். இதேபோல், தற்போது நடிகை கௌதமியும் அதிமுகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், பாஜக தென் மாநில சிறுபான்மை அணி பொறுப்பாளர் பாத்திமா அலியும் அக்கட்சியில் இருந்து விலகி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். நாடு இப்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் சிறுபான்மையின மக்களை ஒருங்கிணைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். அதற்கு உதவி செய்யும் கட்சியாக இருக்கும் அதிமுகவில் இணைந்துள்ளேன். தொடர்ந்து பாஜகவில் இருந்தால், இஸ்லாமியராக வாழ்றதுக்கே தகுதி இல்லாம போய்டுவேன் என்று பாத்திமா தெரிவித்துள்ளார்.