பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்பும் இடம் பெறும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த முறை, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு பணத்துடன் கூடிய ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம் பெறாதது மக்களிடையே கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விவசாயிகள், எதிர்கட்சியினர் போராட்டம் நடத்திய நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பில் முழுக்கரும்பு இடம் பெறும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், 2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் ஜனவரி 3 ஆம் தேதி முதல் ஜனவரி 8 ஆம் தேதி வரை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை ஜனவரி 2ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜனவரி 9ஆம் தேதிக்கு நிகழ்ச்சியானது மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.