திருமணமான ஆண்களின் தற்கொலைகள் குறித்து ஆய்வு செய்து, தேசிய ஆணையம் போன்ற ஒரு மன்றத்தை அமைப்பது தொடர்பான மனுவை உச்சநீதிமன்றம் ஜூலை 3-ஆம் தேதி விசாரிக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் மகேஷ்குமார் திவாரி என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தகவல்படி, கடந்த 2021-ம் ஆண்டு, 1 லட்சத்து 64 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களில் 81 ஆயிரம் பேர் திருமணமான ஆண்கள், 28 ஆயிரத்து 680 பேர் திருமணமான பெண்கள் ஆவர். குடும்ப பிரச்சினைகளால் திருமணமான ஆண்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.
இதை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும். குடும்ப பிரச்சினை தொடர்பான ஆண்களின் புகார்களை போலீஸ் நிலையத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆண்களின் நலன்களை பாதுகாக்க ‘தேசிய ஆண்கள் ஆணையம்’ அமைக்க சட்ட ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் சூர்யகாந்த், திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வரும் 3-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.