சுகன்யா சம்ரிதி யோஜனா என்ற திட்டம் பெண் குழந்தைகளுக்காக கொண்டுவரப்பட்ட மிகச்சிறந்த திட்டமாகும். நாட்டில் பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கான பிரபலமான சேமிப்பு திட்டமாக இந்த திட்டம் உள்ளது. அரசாங்கத்தால் உத்தரவாதம் வழங்கப்பட்ட வரி பிடித்தம் இல்லாத வருமானத்தை கொடுக்கின்றது. இந்திய பெண் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது தான் இந்த சேமிப்பு திட்டம். பெற்றோர்கள் தங்களுடைய பெண் குழந்தைகளுக்காக வருடாந்திர அல்லது மாதாந்திர அடிப்படையில், இந்த திட்டத்தில் சேமிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இந்தத் திட்டம் தற்சமயம் 8 சதவீத வட்டி விகிதத்தை கொடுக்கின்றது. ஆனாலும், இந்த வட்டி விகிதம் காலாண்டு அடிப்படையில், மாறுதலுக்குரியது. ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு முறை மத்திய அரசு சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை மாற்றி அமைத்து வருவதாக சொல்லப்படுகிறது.
பெற்றோர்கள் தங்களுடைய பெண் குழந்தை பிறந்தவுடன் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய தொடங்கினால், அந்த குழந்தைக்கு 14 வயது ஆகும் வரையில் ஒருவர் இந்த திட்டத்தில் டெபாசிட் செய்யலாம். அந்த பெண் குழந்தைக்கு 18 வயது ஆனவுடன், அந்த பெண்ணின் உயர்கல்வி அல்லது திருமணம் போன்றவற்றிற்காக பணத்தை நாம் திரும்ப பெற முடியும். ஆனால், முந்தைய நிதி ஆண்டின் இறுதியில் கணக்கில் உள்ள தொகையில் 50 சதவீதம் மட்டுமே நம்மால் திரும்ப பெற முடியும் என்று சொல்லப்படுகிறது.
பெற்றோர்கள் தங்களுடைய பெண் குழந்தைகளின் கல்விக்காக சேமிப்பதற்கு இந்த சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் மிகச்சிறந்த திட்டம் என்று நிதி வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். ஏனென்றால், முதலீட்டு எல்லை குழந்தை பட்டப்படிப்பு மற்றும் உயர்கல்வியை தொடரும். ஆனால், உங்கள் மகளுக்கு நான்கு முதல் ஐந்து வயதுக்கு மேல் இருக்கும் சமயத்தில் நீங்கள் இந்த திட்டத்தில் இணைந்தால், உங்கள் பெண் குழந்தையின் உயர் கல்விக்கு நிதியளிக்கும் இலக்கை அடைய முடியாமல் போகலாம்.
ஒரு நபர் பதினைந்து வருடங்களுக்கு இந்த சுகன்யா சம்ரிதி யோஜனா கணக்கில் 12 தவணைகளில் வருடத்திற்கு 1.5 லட்சம் அல்லது மாதத்திற்கு 12,500 முதலீடு செய்கிறார் என்று வைத்துக் கொண்டால், 8% வட்டி விகிதத்தின் படி அந்த பெண்ணுக்கு 21 வயதாகும்போது, முழு பணத்தையும் திரும்ப பெறுவதற்கு முதலீட்டாளர் முடிவு செய்தால், இந்த திட்டத்தின் முதிர்வு தொகை சுமார் 63,79,634 ரூபாயாக இருக்கும்.
இந்த சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில், முதலீடு செய்யப்படும் டெபாசிட் வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ், 1.5 லட்சம் வரையில் வருமான வரி விலக்கு பெற தகுதி உடையவை கணக்கின் மூலமாக பெறப்படும் வட்டி தொகை, முதிர்வு தொகை ஆகியவற்றுக்கு வரி விதிக்கப்படாது. ஆகவே பெண் குழந்தையை வைத்திருக்கும் பெற்றோர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்தால், தங்களுடைய குழந்தையின் கல்வியை எந்தவிதமான தடையும் இல்லாமல் தொடர முடியும்.