பழங்குடி நலவாரிய உறுப்பினர்களுக்கான விபத்து, கல்வி உள்ளிட்ட நலத்திட்ட உதவித்தொகைகளை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பழங்குடியினர் நலவாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவித் தொகை, இதர நல வாரியங்களால் வழங்கப்படும் உதவித் தொகைக்கு இணையாக உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவித்தார். இந்நிலையில், இதுதொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், இதர நல வாரியங்களில் வழங்கப்படும் உதவித்தொகைக்கு இணையாக உயர்த்தி வழங்கப்படும். இதனால், சுமார் 3,826 பயனாளிகள் பயன்பெறுவர்.

அதன்படி, விபத்தினால் மரணம் ஏற்பட்டால் ரூ.1.25 லட்சம், இயற்கை மரணத்துக்கு ரூ.30 ஆயிரம், முறையான பட்ட மேற்படிப்புக்கு ரூ.4 ஆயிரம், தொழில் பட்டப்படிப்புக்கு ரூ.4 ஆயிரம், தொழில் பட்ட மேற்படிப்புக்கு ரூ.6 ஆயிரம் என உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும். அதேபோல, திருமண உதவித்தொகை ஆணுக்கு ரூ.3 ஆயிரம், பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் என உயர்த்தி வழங்கப்படும். மேலும், முதல்முறையாக 6 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.