மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த மிக முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றான பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தான். இந்த திட்டம் எப்பொழுது தொடங்கப்படும் என்று அனைத்து எதிர்கட்சிகளாலும் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பப்பட்டு வந்தது.
கடந்த செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் 24.7.2023 அன்று தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைக்கப்பட்டது.
இதற்கான விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இத்திட்டத்தில் தகுதி பெற்றுள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்களில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்குக்கு ரூ.1,000 உரிமைத் தொகை செலுத்தப்பட்டது. ஆனாலும் பல தகுதி வாய்ந்த மகளிருக்கு இந்த திட்டத்தில் பணம் வரவில்லை என்று புகார் எழுந்தது. இதையடுத்து மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.
நிராகரிக்கப்பட்டோரில் பலரும் மேல்முறையீடு செய்து வரும் நிலையில், இதுவரை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் மேல்முறையீடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வரும் 18-ம் தேதி வரை மேல்முறையீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே இந்த திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். தமிழக அரசு ஏற்கனவே கடனில் இருக்கும் சூழலில் இதுபோன்ற திட்டங்கள் மேலும் கடன் சுமையை அதிகரிக்கும் என்பதால் இந்தத் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கூறி அவர் வழக்கை தொடர்ந்துள்ளார்.