சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்றைய தினம், காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றியா ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், அதனை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. பாரதத்தின் பகுதியே தமிழகம். தமிழகம் பாரதத்தின் அடையாளம். உலக நாடுகளுக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாதான் தலைமையாக இருக்கப்போகிறது” என்று பேசியது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்வது தான் சரி என்ற ஆளுநரின் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்த சமூக வலைத்தளங்களிலும் தமிழ்நாடு என்ற ஹாஷ்டாக் இந்தியா அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. அந்த வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு வெறும் பெயரல்ல… தனித்துவ அடையாளம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அவரது பதிவில் “தமிழ்நாடு வெறும் பெயரல்ல. புவியியல்-மொழியியல்-அரசியல்-பண்பாட்டின் தனித்துவ அடையாளம். பெரும் போராட்டத்திற்கு பிறகு தமிழ் நிலத்திற்கு பெயர் சூட்டினார், கழகம் தந்த அண்ணா. அவர் வழியிலும், முத்தமிழறிஞர் வழியிலும் தமிழ்நாட்டினை தலைவர் ஸ்டாலின் தலைமையிலான கழகம் அரணாக காத்து நிற்கும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி அவர்களின் பதிவில் “நம் மொழி – பண்பாடு – அரசியல்-வாழ்வியலின் அடையாளம் “தமிழ்நாடு”. அப்பெயரை சட்டமன்றத்தில் சட்டமியற்றி, பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தது பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு. இது என்றும் தமிழ்நாடு தான்!” என்று குறிப்பிட்டுருந்தார்.