இலங்கையின் இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள சிங்கள மக்களது மயானத்தில் வீடுகளை உடைத்த கழிவுப்பொருட்கள் கொட்டப்பட்டுள்ளன. அங்கு வந்த சிங்கள மத துறவியும், முன்னாள் ஆளுநருமான அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அதனைப் பார்வையிட்டார். பின்னர் பேசிய அவர், ‘’இருதயபுரம் பகுதியில் அமைந்துள்ள சிங்கள மயானம் கனரக இயந்திரம் கொண்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் எனது தாயின் சமாதி அமைந்துள்ளது. இதனை அழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுவே, இனவாதம். நாம் இனவாதத்தை தூண்டும் தேரர்கள் அல்ல. நாம் இலங்கையில் உள்ள தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் உதவி செய்துள்ளோம். நாம் யாருடைய மயானங்களையும் அழிக்கவில்லை. எனது தாயின் சமாதிக்கு அடுத்ததாக இந்துக்களின் மயானம் உள்ளது. இதை தாண்டி கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் மயானங்கள் உள்ளது. ஏன் அவற்றை யாரும் கனரக இயந்திரங்களை கொண்டு சுத்தம் செய்யவில்லை? ஏன் சிங்களவர்களின் மயானத்தை மட்டும் சுத்தம் செய்கிறீர்கள்?
இந்த நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென இலங்கை அதிபர், காவல்துறையினர் உள்ளிட்டோரிடம் கேட்டுள்ளேன். இவ்வாறாக முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால், கிழக்கிலுள்ள அனைத்து தமிழர்களையும் சிங்களவர்கள் துண்டுத் துண்டாக வெட்டுவார்கள்’’ என ஆவேசமாக கூறினார். இவரின் பேச்சு இலங்கையில் கடும் கொந்தளிப்பு ஏற்படுத்தியுள்ளது.