உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் வரும் 22ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட கற்களை குடைந்து, 350-க்கும் மேற்பட்ட தூண்கள் மூலம் ராமர், சீதைக்கு கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைவரும் வியந்து பார்க்கும் வகையில் கும்பாபிஷேகம் நடத்த உத்தரப்பிரதேச அரசும் தயாராகி வருகிறது.
கோயிலின் நுழைவு பகுதி, முன் மண்டபம், பக்கவாட்டு மண்டம், வெளியே வரும் வழி, ராமர் – சீதை கருவறைகள், ராமரின் தம்பி லட்சுமணன் மற்றும் ஆஞ்சநேயர் உள்ளிட்ட 44 வாசல்களுக்கு, 44 தேக்கு மரக்கதவுகள் தயாராகி உள்ளன. இவற்றை மாமல்லபுரம் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில் படித்த கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தையைச் சேர்ந்த மரச்சிற்பக்கலைஞர் ரமேஷ் தலைமையில், 50-க்கும் மேற்பட்டோர் அழகுற வடிவமைத்து முடித்துள்ளனர்.
சிற்பக் கலைஞர்களை அயோத்திக்கு அழைத்துச் சென்று அங்கேயே தங்க வைத்து பணிகளை முடித்துக் கொடுத்ததாக ரமேஷ் கூறியுள்ளார். இரண்டு யானைகள், 2 தேவ கன்னிகைகள் வரவேற்பது போலவும், தாமரை மலர்வது போலவும் முன் மண்டப கதவுகளில் பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மத்தியப்பிரதேசத்தில் உள்ள பலாஷா காடுகளில் இருந்து பல நூறு ஆண்டுகள் நிலைத்து நிற்க கூடிய தேக்கு மரங்களை கொண்டு மரச்சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவற்றை தவிர, பிரதான வாயிலுக்கு, 8 அடி உயரத்தில் 12 அடி அகல அளவில் மயில் சிற்பங்கள் அலங்காரத்துடன் நான்கு மடிப்பு அமைப்பில் கதவுகள் செய்யப்பட்டுள்ளன. முகப்பு மண்டபத்தின் மேல் தளத்திற்கு செல்லும் படிகள் உள்ளிட்டவையும் வியக்கதக்க வகையில் தயாராகியுள்ளன. கதவுகளுக்கு செப்பு தகடுகள் பொருத்தி தங்கமுலாம் பூசப்பட்டுள்ளது. ராமர் சிலையை கர்ப்ப கிரகத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக கொண்டு செல்லக்கூடிய சிறிய பல்லக்கை செய்து கொடுத்துள்ளதாகவும் ரமேஷ் கூறியுள்ளார்.