பொதுத் தேர்வு பணிகளில் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களை நியமனம் செய்ய கூடாது என்று அரசுத் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுத்துறை மாவட்ட முதன்மைக்கல்வி அலுலவர்களுக்கு வழங்கப்பட்ட உள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், “தேர்வு மையத்தின் முக்கியப் பொறுப்பான முதன்மைக் கண்காணிப்பாளர் பணியில் தனியார் பள்ளி தேர்வு மையங்களுக்கு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளித் தலைமையாசிரியர்களையோ அல்லது அரசுப் பள்ளிகளின் மூத்த ஆசிரியர்களையோ தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளராக நியமனம் செய்து கொள்ள வேண்டும்.
தேர்வு மையங்களுக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களை முதன்மைக் கண்காணிப்பாளராக நியமனம் செய்தல் கூடாது. 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மிகாமல் உள்ள அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மூத்த ஆசிரியர்களை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளராக நியமனம் செய்ய வேண்டும்.
எக்காரணம் கொண்டும் தனியார் பள்ளிகளின் முதல்வர்களையோ, துணை முதல்வர்களையோ, ஆசிரியர்களையோ எந்த தேர்வுமையத்திற்கும் முதன்மைக் கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்தல் கூடாது. அரசுப் பள்ளியைச் சார்ந்த ஆசிரியர்களே துறை அலுவலராக நியமனம் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.