ஜம்முவின் பூஞ்ச் மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஒரு விமானப்படை வீரர் உயிரிழந்தார் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர்.
இந்திய விமானப்படை வீரர்கள் சென்ற இரண்டு வாகனங்கள் ஷாசிதார் அருகே சென்ற போது, நேற்று மாலை 6 மணியளவில் பயங்கரவாதிகளால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இப்பகுதி எல்லை மாவட்டத்தில் உள்ள சூரன்கோட்டின் சனாய் டாப் மற்றும் மெந்தரின் குர்சாய் பகுதிக்கு இடையே உள்ளது. காயமடைந்த வீரர்கள் விமானப் படை ஹெலிகாப்டர்களில் சிகிச்சைக்காக உதம்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற மூவர் நிலையாக இருப்பதாகவும். அவர்கள் தொடர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய விமானப்படை கூறியதாவது; ஜம்முவின் பூஞ்ச் மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை பயங்கரவாத தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது விமானப்படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் ஐந்து விமானப்படை வீரர்கள் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் விமானப்படை வீரர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உள்ளூர் பாதுகாப்புப் படையினர் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வர். தாக்குதலை தொடர்ந்து தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பூஞ்ச் பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூஞ்ச் மாவட்டம் அனந்த்நாக்-ரஜோரி நாடாளுமன்றத் தொகுதியின் ஒரு பகுதியாகும், இங்கு மே 25 அன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.