உத்தரப்பிரதேசம் தம்பூர் பகுதியை சேர்ந்தவர் புனித். இவர் உத்தரகாண்ட் மாநிலம் சித்கல் பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைஸராக பணியாற்றி வருகிறார். புனித்தும் சித்கல் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் காதலுக்கு இரண்டு குடும்பத்தினருமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் புனித்துக்கு வேறறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து புனித்துடனான உறவை துண்டித்த அந்த இளம் பெண், பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை திருமணம் செய்ய சம்மதித்துள்ளார்.
இந்நிலையில் அந்த இளம் பெண்ணை காணவில்லை என அவரது பெற்றோர் சித்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தின் ரானிபூர் பகுதியில் உள்ள திபிரி சாலை ஓரம் உள்ள புதரில் அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பெண்ணின் சடலம் முற்றிலும் அழுகிய நிலையில் இருந்ததால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளை, அவர்களின் உறவினர்களை அழைத்து உடலை காண்பித்தனர். இதில் புனித்தின் காதலியான இளம்பெண் தான் கொலை செய்யப்பட்டது என்பது அவரது தந்தை அளித்த தகவலின் அடிப்படையில் உறுதியானது.
இதையடுத்து அவரது செல்போன் எண்ணை ஆய்வு செய்த போலீசார், அவரது முன்னாள் காதலரான புனித்தை தட்டி தூக்கினர். விசாரணையில், தான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ததால், அந்த இளம்பெண் தன்னுடனான உறவை துண்டித்ததாகவும், தனது ஆசைக்கு இணங்க மறுத்ததோடு தனது மொபைல் எண்ணையும் மாற்றியதாக தெரிவித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த புனித், கடைசியாக ஒருமுறை சந்தித்து பேச வேண்டும் என கூறி, ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்று கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து புனித்தை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.