12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, பணம் கேட்டு மிரட்டி, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் மாவட்டத்தின் ஜெனாபூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அதே கிராமத்தில் வசிக்கின்றனர். இந்தச் சம்பவம் சில நாட்களுக்கு முன்பு நடந்தாலும், அந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகும் வரை சிறுமி தனது பெற்றோரிடம் தான் பலாத்காரம் செய்யப்பட்ட விஷயத்தைத் தெரிவிக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் ஒருவர் வீடியோவை பார்த்து, இதுபற்றி அவரது தந்தைக்கு தெரிவித்தார். தந்தை மகளிடம் விசாரித்தபோது, தனக்கு நேர்ந்த கொடுமையை சிறுமி விவரித்தார்.

“பாதிக்கப்பட்டவரின் தந்தையின் புகாரைத் தொடர்ந்து, 3 சிறுவர்கள் மீது போக்சோ சட்டம் மற்றும் ஐடி சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,” என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறியுள்ளார். காவல்துறையின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் 14-17 வயதுக்குட்பட்டவர்கள். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர்கள் வீடியோ கிளிப்பைப் பயன்படுத்தி மைனர் பெண்ணை மிரட்டத் தொடங்கியுள்ளனர். மேலும், 20,000 ரூபாய் கொடுக்கவில்லை என்றால், அதை பகிரங்கப்படுத்துவேன் என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறுமியை மிரட்டியுள்ளனர். ஆனால் ,பாதிக்கப்பட்ட பெண் மறுத்ததால், அவர்கள் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.