உத்தரபிரதேச மாநிலம், அசம்கர் மாவட்டத்தில் உள்ள ஜியான்பூர் நகரில் இரவு 10:00 மணியளவில் வீட்டின் அருகே பைக்கில் வந்துக்கொண்டிருந்த போது, அருகில் வேகமாக வந்த கார் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது, இதில் பைக் ஓட்டுநருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இந்த விபத்தை அடுத்து பைக் காரின் அடியில் சிக்கியது. ஆனால், கார் டிரைவர், காரை நிறுத்தாமல் தொடர்ந்து இயக்கி தப்பி ஓடினார்.
இந்த விபத்தைக்கண்ட அருகில் இருந்த பைக் ஓட்டுநரின் உறவினர்கள் காரை துரத்த ஆரம்பித்தனர். காரின் அடியில் மாட்டிய பைக்கை, தரதரவென்று 30 கிலோமீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்றதாக் கூறப்படுகிறது. வழியெங்கும் நெருப்பு பொறியுடன் பைக்கை இழுத்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களிலும் உலா வருகிறது.
துரத்தி வந்தவர்களுக்கு பயந்து 30 கிமீ தூரம் ஓட்டிச் சென்று வீட்டை அடைந்த கார் டிரைவர், பயந்து உள்ளே சென்று வீட்டை பூட்டிக் கொண்டார். இதற்கிடையே காரின் அடியில் இருந்த பைக்கை அப்புறப்படுத்திய உறவினர்கள் காரை சேதப்படுத்தினர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து ஏற்ப்படுத்திய காரை நாசம் செய்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.