கரூர், ஈரோடு, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 3 கோயில்களுக்கு சொந்தமான ரூ.31.30 கோடி மதிப்பீட்டிலான நிலங்கள், ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கரூர் மாவட்டம் அருள்மிகு கல்யாண பசுபதீசுவர சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான தோரணக்கல்பட்டியில் அமைந்துள்ள 7.51 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. தற்போது, கரூர் மாவட்ட உதவி ஆணையர் பி.ஜெயதேவி முன்னிலையில் காவல்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களின் உதவியோடு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இதன் தற்போதைய மதிப்பு ரூ.22 கோடியாகும்.
அதேபோல் ஈரோடு மாவட்டம் திருவாச்சி அருள்மிகு கரிய பெருமாள் கரிய காளியம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான 2.46 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. அதுவும் அலுவலர்களின் உதவியோடு அகற்றப்பட்டு திருக்கோயில்கள் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு ரூ.7.60 கோடியாகும்.
அதேபோல் திருவாரூர் மாவட்டம் திருவாஞ்சியம் கிராமம், அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 16 ஏக்கர் 82 சென்ட் நிலத்தினை 14 நபர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இந்த நிலத்தினை நாகை மண்டல இணை ஆணையர் வே.குமரேசன் தலைமையில், திருவாரூர் உதவி ஆணையர் ப.இராணி முன்னிலையில் காவல்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களின் உதவியோடு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு திருக்கோயில்கள் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு ரூ.1.70 கோடியாகும்.
மொத்தம் ஒரே நாளில் மீட்கப்பட்ட 3 திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களின் மதிப்பு ரூ.31.30 கோடியாகும் என்று இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.