சென்னை, நீட் பயிற்சி வகுப்புகளை அரசு பள்ளி மாணவர்களுக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடுத்த மாதம் தொடங்கி வைக்க உள்ளார். மேலும் திறன்மிக்க ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு நேரடியாக பயிற்சி வகுப்புகள் அளிக்கப்பட இருக்கிறது. நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவாக இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக டிசம்பரில் தொடங்கும் நீட் பயிற்சி இந்த வருடம் முன்னதாகவே தொடங்கப்பட இருக்கிறது.
தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் வகையில் தகுதியான நீட் பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வு நடைமுறை 2017-ஆம் வருடத்திலிருந்து அமலில் இருக்கிறது. இருந்தாலும், நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப்பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
இதனால் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நீட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 2018-ஆம் வருடம் முதல் பள்ளிக்கல்வித் துறையால் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நீட் பயிற்சி வகுப்புகளை அரசு பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடுத்த மாதம் தொடங்கி வைக்க இருக்கிறார். தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக அரசு, நீட் தேர்வை ரத்து செய்யும் முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.