தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பெய்த அதீத கனமழையினால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தொழில், வர்த்தக நிறுவனங்கள், வீடுகள், பள்ளிகள் என அனைத்திலும் நீர் புகுந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 6,000 ரூபாய் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்பி வருகிறது. வெள்ளநீர் வடிந்து வரும் நிலையில், நகரின் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் வடியாத காரணத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு விடுமுறை நாட்கள் அரசு அலுவலர்களுக்குப் பொருந்தாது என்று அம்மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவித்துள்ளார். மழை பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் நடப்பதால் அதில் அரசு ஊழியர்களின் பணி அத்தியாவசியமானது. ஆகையால், அவர்களுக்கு தற்போது வரும் அரசு விடுமுறை நாட்கள் பொருந்தாது என்று அவர் தெரிவித்துள்ளார்.