ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் தேவராஜ். இவர் சென்னையில் டாக்ஸி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கொலை வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக நேற்று தேவராஜ், பரமக்குடி வந்துள்ளார். நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு எம்ஜிஆர் நகரில் உள்ள தனது நண்பர் கோபியின் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தேவராஜ் உறவினரான பன்னீர் என்பவருக்கு பணம் கொடுத்து உதவியுள்ளார். பணம் பெற்றுக் கொண்ட பன்னீர் அதை திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தியதால், அவரது காரை தேவராஜ் சென்னைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
இது குறித்து பன்னீர், தேவராஜிடம் அடிக்கடி காரை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு தேவராஜ் மறுத்து வந்துள்ளார். இந்நிலையில் தான் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த தேவராஜை பன்னீரின் உறவினர் முனீஸ்வரி இல்லத்திற்கு வரவழைத்து பேசி உள்ளனர். பேச்சுவார்த்தையில் தகராறு ஏற்பட்டு பன்னீர் அவரது உறவினர் தமிழ், வினித், ஆகியோர் தேவராஜை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் தேவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பரமக்குடி நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள கொலையாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.