கோவை மாவட்டம் பொள்ளாச்சி கெளரி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இரவில் இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. குடியிருப்பில் இருந்த வீட்டில் கல்லூரி மாணவி ஒருவர் கத்திகுத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், அங்கு வந்த மகாலிங்கபுரம் போலீசார், இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட வீட்டில் சுஜய் (வயது 30) என்ற வாலிபர் வசித்து வந்தது தெரியவந்துள்ளது. சுஜய்-க்கு திருமணமாகி ரேஷ்மா என்ற மனைவி உள்ளார். இடையர்பாளையத்தை சேர்ந்த சுஜய் ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் வேலை செய்து வருகிறார். சுஜய் மனைவி ரேஷ்மா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளதால் பிரசவத்திற்காக கேரளாவில் உள்ள அவரது அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார்.
சுஜய் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண், கோவை மாவட்டம் இடையர்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவி சுப்புலட்சுமி (20) என்பது தெரியவந்தது. நேற்றிரவு சுப்புலட்சுமியை சுஜய் அவரது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். சுப்புலட்சுமியின் உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு சுஜய் தலைமறைவாகிவிட்டார். இந்த சம்பவத்தில் சுஜய் கைது செய்யப்பட்ட பிறகே கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர். பொள்ளாச்சியில் கல்லூரி மாணவியை கொலை செய்த சுஜயை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா மாநிலம் பாலக்காடு விரைந்தனர்.