12-ம் வகுப்பு துணைத் தேர்வின் விடைத்தாள் நகலினை இனையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பன்னிரண்டாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள் நகலினை இன்று மதியம் 12 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினைப் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு மாணவர்கள் விண்ணப்பிக்க விரும்பினால் அதற்கான விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து நாளை முதல் 10-ம் தேதி மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.