மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநக மாவட்டத்தில் உள்ள சம்ருதி தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு 1 மணியளவில் கண்டெய்னர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழப்பு. மேலும் 23 பேர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான தனியார் வேனில் 35 பேர் பயணம் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. புல்தானா சைலானி பாபா தர்காவில் இருந்து நாசிக் நோக்கி தனியார் வேன் 35 பயணிகளுடன் திரும்பிக் கொண்டிருந்தபோது, சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள விரைவுச் சாலையின் வைஜாபூர் பகுதியில், நள்ளிரவு 12.30 மணியளவில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 ஆண்கள் 6 பெண்கள், ஒரு மைனர் பெண் உள்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பில், “சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் நடந்த விபத்தில் உயிர் இழந்தது வேதனை அளிக்கிறது. என் எண்ணங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். கூடுதல் உதவித்தொகையாக இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் செலவை அரசே ஏற்கும் எனவும் அறிவித்துள்ளார்.