தனியார் பள்ளியில் படிக்கும் 4 வயது சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் கணித ஆசிரியரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த மருத்துவம் பாடி கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். இவர், உலகம்பட்டு அரசுப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தனியார் மெட்ரிக் பள்ளி நடத்தி வருகிறார். இவர், அந்த பள்ளியின் தாளாளராக உள்ளார். இதற்கிடையே, காமராஜ் அடிக்கடி அவரது மனைவி நடத்தும் பள்ளிக்கு வந்து நிர்வாகத்தை கவனித்து வந்துள்ளார். அந்த சமயத்தில், அந்தப் பள்ளியில் படிக்கும் 4 வயது சிறுமிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால், பெற்றோர்கள் சிறுமியை போளூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனாலும், உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருப்பதை தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட சைல்டுலைன் பிரிவுக்கு தகவல் தெரிவித்தனர்.
![மனைவி நடத்தும் பள்ளியில் சிறுமியை வன்கொடுமை செய்த கணவன்..! குவிந்த மக்கள்..! போலீஸ் குவிப்பு..!](https://1newsnation.com/wp-content/uploads/2022/06/sex-1024x615.jpg)
இதையடுத்து, போளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதில், பள்ளிக்கு சென்ற சிறுமியை சாக்லேட் கொடுத்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து பள்ளியின் சம்பந்தப்பட்டவர்களின் போட்டோக்களை காண்பித்து சிறுமியிடம் அடையாளம் காணும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது பள்ளி தாளாளர் பிரபாவதியின் கணவர் காமராஜ் என்பது தெரியவந்தது. இந்த தகவல் வெளியானதும் நேற்று பள்ளி முன்பு பொதுமக்கள் திரண்டனர். பின்னர், பள்ளி வளாகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.
![மனைவி நடத்தும் பள்ளியில் சிறுமியை வன்கொடுமை செய்த கணவன்..! குவிந்த மக்கள்..! போலீஸ் குவிப்பு..!](https://1newsnation.com/wp-content/uploads/2022/08/WhatsApp-Image-2022-08-28-at-11.35.12-AM.jpeg)
இதற்கிடையே திருச்செந்தூர் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த காமராஜை திருவண்ணாமலை மாவட்ட போலீசார் கொடுத்த தகவலின் பேரில், எட்டயபுரம் போலீசார் கைது செய்தனர். அவரை போளூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தனியார் பள்ளி முன்பு 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.