உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில், கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் மகா கும்பமேளா விமரிசையாக நடைபெற்று வருகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த நிகழ்வு, ஜனவரி 12ஆம் தேதி தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில், சந்நியாசிகள், துறவிகள், சாதுக்கள், சாத்விகள், கல்பவாசிகள், யாத்திரிகர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
கும்பமேளா நடைபெறும் காலங்களில், திரிவேணி சங்கமத்தில் நீராடுவதை பக்தர்கள் மிகவும் புனிதமாக கருதுகின்றனர். உலகம் முழுவதும் இருந்து வந்த 63 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புனித நீராடியுள்ளதாக உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.
இதற்கேற்ப, உத்தரப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சிறைக் கைதிகளுக்கு புனித நீர் அனுப்பி வைக்கப்பட்டது. சிறை வளாகத்தில் ஏற்படுத்தப்பட்ட தொட்டிகளில் அவர்கள் புனித நீராடினர்.
மகா சிவராத்திரி தினமான இன்று (பிப். 26) 45 நாள்களாக நடைபெற்று வந்த மகா கும்பமேளா நிறைவு பெறுகிறது. நிறைவு நாளை முன்னிட்டு, பிரயாக்ராஜில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் மற்றும் பிரமாண்ட நிகழ்வுகள் நடைபெறுகின்றன. மகா சிவராத்திரியையொட்டி, ஏராளமான பக்தர்கள் பிரயாக்ராஜில் திரளுகின்றனர். லட்சக்கணக்கானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, பிரயாக்ராஜில் பல பகுதிகளில் வாகன போக்குவரத்து தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்காக மருத்துவர்கள், காவலர்கள், நிர்வாக அதிகாரிகள் தொடர்ந்து செயல்படுவார்கள் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜில் பொதுமக்கள், அவர்கள் இருக்கும் இடத்தின் அருகிலேயே புனித நீராட வேண்டும் என்பதற்கான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.