குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசிக்கும் 45 வயது பெண் ஒருவர் வீட்டில் அதிர வைக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இவரது வீட்டில் சில காலமாகவே சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் இருந்து வந்துள்ளது. சமையல் அறையில் இருந்த சர்க்கரை பெட்டியில் யாரோ பூச்சி மருந்தை கலந்து வைத்துள்ளனர். அதேபோல, பாத்ரூமில் வழுக்கி விழும் விதமாக அங்கு அடிக்கடி தரை சுத்தம் செய்யும் திரவம் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. இது அந்த பெண்ணுக்கு அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், பெண்கள் உதவி மையத்தை அவர் நாடியுள்ளார். அவர்கள் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி உண்மை அம்பலமாகியுள்ளது.
இந்த பெண்ணுக்கு 13 வயது மகள் உள்ள நிலையில், அந்த சிறுமி செல்போன் பழக்கத்திற்கு தீவிர அடிமையாகி உள்ளார். எப்போது பார்த்தாலும் சமூக வலைத்தளத்தில் ரீல்ஸ் வீடியோ பார்ப்பது அல்லது நண்பர்களுடன் சேட்டிங் செய்வது என இருந்துள்ளார். இதனால், இவரின் பழக்க வழக்கம் மோசமாகியுள்ளது. இதனால் கவலை கொண்ட தாய் செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டு தரவில்லை. இது சிறுமியை மேலும் மூர்க்கமாக்கியுள்ளது. தனக்கு தாய் செல்போன் தராத ஆத்திரத்தில் அவரை பழிவாங்க வேண்டும் என சர்க்கரை டப்பாவில் பூச்சி மருந்தை கலந்தும், பாத்ரூமில் திரவத்தை ஊற்றியும் சதி வேலை செய்துள்ளார். விசாரணையில் வெளியான தகவலை கேட்டு பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்த நிலையில், மனநல ஆலோசகர்கள் சிறுமிக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர்.