நவி மும்பையில் உள்ள உவ்வே பகுதியில் உள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியின் அருகில், பிறந்து சில மணிநேரம் ஆன குழந்தை ஒன்று கிடந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையாக, அபார்ட்மெண்டில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் போலீசார் விசாரணை நடத்தியபோது, இரண்டாவது மாடியில் ஜன்னல் கம்பிகள் இல்லாதது தெரியவந்துள்ளது. ஆகையால், அந்த வீட்டை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தினர். அப்போது, அங்கு வசித்து வந்த இளம்பெண் தான் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
அந்த இளம் பெண்ணுக்கு உறவினர் ஒருவருடன் தொடர்பு இருந்துள்ளது. இதன் விளைவாக அவர் கர்ப்பமாகியுள்ளார். கர்ப்பமாகி எட்டு மாதங்கள் ஆகியும், வயிறு பெரிதாக இல்லாததால், யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைத்துள்ளார் இளம்பெண். அவர் ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இரவு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்த அவர், யாருக்கும் தெரியாமல் ஜன்னல் வழியாக குழந்தையை தூக்கி வீசியுள்ளார். இந்த விவரங்கள் தெரிய வந்ததும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.