தமிழகத்தில் இன்று முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயருகிறது..
தமிழகத்தில் தினமும் சுமார் 2.25 கோடி லிட்டர் பால் உற்பத்தி நடைபெறுகிறது. இதில் 38.26 லட்சம் லிட்டர் பால் அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படுகிறது. மீதமுள்ள பாலை தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த தனியார் நிறுவனங்களே கொள்முதல் செய்கின்றன. மேலும் தனியார் பால் நிறுவனங்கள் அவ்வப்போது விலையை உயர்த்துவதை வழக்கமாக கொண்டுள்ளன.. 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்குக்கு முன்பு தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.6 அதிரடியாக உயர்த்தப்பட்டது. ஆனால் தனியார் பால் உற்பத்தியாளர்கள் தன்னிச்சையாக விலை உயர்வதற்கு பால் முகவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..
இந்த நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு முறையும், மே மாதம் ஒரு முறையும் தனியார் பால் விலை உயர்த்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் 3-வது முறையாக தனியார் பால் விலை உயர்த்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் தனியார் பால் விலை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் உயருகிறது.
அதன்படி சீனிவாசா பால் நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி உள்ளது.. ஹட்சன் நிறுவனம் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்த உள்ளது. மற்ற நிறுவனங்களும் பால் விலையை அடுத்தடுத்த நாட்களில் உயர்த்த திட்டமிட்டுள்ளன. அதன்படி லிட்டருக்கு ரூ.4 வரை விலையை உயர்த்த பல தனியார் பால் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. தனியார் பால் விலை உயர்வு காரணமாக பால் சார்ந்த இதர பொருட்களும் விலை உயரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த புதிய முடிவு, பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. மேலும் தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு தனியார் பால் விலை நிர்ணயம் குறித்து சரியான வரைமுறைகளை கையாள நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளது..