விஜய்சேதுபதி நடித்த ‘கடைசி விவசாயி’ படத்தில் அவருக்கு அத்தை கதாபாத்திரத்தில் நடித்தவர் காசம்மாள் (71). மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அருகே ஆனையூரைச் சேர்ந்த இவருக்கு நமகோடி (52), தனிக்கொடி என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் நமகோடி மதுவுக்கு அடிமையானவர். இவரது மனைவி பிரிந்து சென்றுவிட்ட நிலையில், நமகோடி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். ஆனால், அடிக்கடி மது வாங்க பணம் கேட்டு தாயை தொல்லை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்றுதூங்கிக்கொண்டிருந்த தாயை எழுப்பி, மது குடிக்க பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். அவருக்கு காசம்மாள் பணம் தர மறுத்ததைத் தொடர்ந்து, நமகோடி ஆத்திரத்தில் கட்டை ஒன்றால் தாய் என்றும் பாராமல் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த காசம்மாள், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், காசம்மாளின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான மகன் நமகோடியையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.