2022-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய உக்ரைன் – ரஷ்யா போரில் இரண்டு நாடுகளுக்கும் கடுமையான சேதம் ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் உக்ரைனுக்கு உதவி செய்துவருகின்றன. இதனால் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையில், உக்ரைனில் இருக்கும் பெரும்பாலான பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரஷ்யாவின் ராணுவப் போக்குவரத்து விமானமான இலியுஷின்-76 விமானம், உக்ரைன் எல்லையில் உள்ள தெற்கு பெல்கொரோட் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்து ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலில், “ரஷ்யாவின் ராணுவப் போக்குவரத்து விமானமான இலியுஷின்-76 விமானத்தில், 65 உக்ரைன் போர்க் கைதிகள், 6 பணியாளர்கள் உட்பட 74 பேர் பயணித்தனர்.
மேலும், அந்த விமானத்தில் ரஷ்யாவின் S-300 வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான ஏவுகணைகள் கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில், உள்ளூர் நேரப்படி சுமார் 11:00 மணியளவில், பெல்கோரோட்டின் வடகிழக்கில் 70 கி.மீ தொலைவில் உள்ள யப்லோனோவோ கிராமத்திற்கு அருகே, அந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கிறது.
இதற்கிடையில், ரஷ்யாவின் நாடாளுமன்றத்தின் கீழ்சபையின் சபாநாயகர் வியாசெஸ்லாவ் வோலோடின், “65 உக்ரேனிய போர்க் கைதிகளை ஏற்றிச் சென்ற விமானத்தை, உக்ரைன் சுட்டு வீழ்த்தியிருக்கிறது. அவர்கள் தங்கள் சொந்த வீரர்களையே சுட்டுக் கொலைசெய்திருக்கிறார்கள். இதில், மனிதாபிமான பணியை மேற்கொண்ட எங்கள் விமானிகளும் பலியாகியிருக்கின்றனர்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
சில உள்ளூர் ஊடகங்களும், உக்ரைன் ராணுவத்தால் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்திருக்கின்றன. ஆனால், உக்ரைன் இதில் ஈடுபட்டது என்பதை உறுதிப்படுத்தும் வகையிலான எந்த தரவுகளும் இல்லை. இந்த நிலையில், அந்த விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது