நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட செங்கோல் முதல் நாளே வளைந்து வளைந்துவிட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். டெல்லியில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாஜக எம்பியும், மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷனை கைது செய்யக்கோரி மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் இன்று புதிய நாடாளுமன்றத்தை நோக்கி சென்ற வீராங்கனைகளை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்ட செங்கோல் முதல் நாளிலேயே வளைந்துவிட்டது என பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. அவர் மீது இதுவரை அக்கட்சியின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து தலைநகரில் போராடி வருகிறார்கள். இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவின்போது, போராட்டம் நடத்திய அவர்களை இழுத்துச் சென்றும், தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது. குடியரசுத் தலைவரையே புறந்தள்ளி, அனைத்து எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கும் ஆளாகி நடைபெறும் திறப்புவிழா நாளில் அராஜகமும் அரங்கேறுவதுதான் அறமா? என்று முதலமைச்சர் ஸ்டாலின் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.