ஆஸ்திரேலியாவில் நடுவானில் இரண்டு ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள தங்க கடற்கரை அருகே சீ வேல்டு தீம் பார்க் என்ற கேளிக்கை பூங்கா உள்ளது. கடற்கரை, கேளிக்கை பூங்கா உள்ளதால் இந்த இடம் சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்து வருவார்கள். மேலும் இங்கு சுற்றலா பயணிகளின் வசதிக்கு ஏற்ப ஹெலிகாப்டர்களும் இயக்கப்படுகின்றன.
அதேபோல் இன்றைய தினமும் அந்த பூங்காவில் ஏரளமான மக்கள் குவிந்தனர், அந்நாட்டு நேரப்படி 2 மணி அளவில், அருகில் இருந்த ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து ஒரு ஹெலிகாப்டர் புறப்படும்போது, எதிர் பக்கத்தில் இருந்து ஒரு ஹெலிகாப்டர் தரை இறங்க வந்தபோது, எதிர்பாராத விதமாக இரண்டு ஹெலிகாப்டர்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். விபத்தில் நொறுங்கிய ஒரு ஹெலிகாப்டர்களும் கடற்கரையில் இருந்து சில அடி தூரத்தில் உள்ள மணல் பரப்பில் விழுந்தது.
இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஹெலிகாப்டர்கள் நடுவானில் எப்படி மோதிக்கொண்டன என்பது தொடர்பாக ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளது.