கோவை மாவட்டத்தில் உள்ள ஈச்சனாரி கணேசபுரத்தில் சிவகங்கையைச் சேர்ந்த ஓட்டுநரான ராஜ்குமார் என்பவர் கடந்த 4 மாதங்களாக வாடகைக்கு அறை எடுத்து தங்கி, வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களாக ராஜ்குமாரின் அறையின் கதவு திறக்கப்படாமல் துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த வீட்டு உரிமையாளர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளார். அப்போது ராஜ்குமார் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டு உரிமையாளர் உடனடியாக காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வீட்டின் கதவை உடைத்து ராஜ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர் எழுதிய கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், திருமண தகவல் இணையதளத்தின் மூலம் விவாகரத்தான பெண் ஒருவர் எனக்கு அறிமுகமானார். அந்த பெண்ணை நான் காதலித்து வந்தேன். ஆனால், அவர் என்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால் தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதியுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.