பனை மரம் ஏற கருவி கண்டுபிடித்தால் ரூ.1 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நமது மாநில மரமான பனை மரத்தின் சாகுபடியை ஊக்குவித்து, பனை மரங்களை நம்பி வாழும் வேளாண் பெருமக்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்கு, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2021-22 ஆம் ஆண்டில் பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ்,76 இலட்சம் பனை விதைகளும், ஒரு இலட்சம் பனங்கன்றுகளும் முழு மானியத்தில் விநியோகம், பனைப் பொருட்களை மதிப்புக்கூட்டுவதற்கான நவீன இயந்திரங்கள் விநியோகம், அரசு நியாய விலைக் கடைகளில் பனை வெல்லம் விற்பனை, பனை மரங்களில் ஆராய்ச்சி என பல்வேறு பணிகளுக்காக அரசுநடவடிக்கை எடுத்தது.
இந்த நிலையில் பனை இயந்திரத்தை கண்டுபிடிப்பவருக்கு விருதளிப்பதற்கும் 50 சதவிகித மாணியத்தில் மதிப்புக் கூட்டப்பட்ட பனை பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைப்பதற்கும், 50 சதவிகித மானியத்தில் மதிப்புக் கூட்டப்பட்ட பனைபொருட்கள் தயாரிப்பதற்கான உபகரணங்கள் வழங்குவதற்கும், பணை ஏறும் விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியத்தில் கருவிகள் வழங்குவதற்கும் தமிழ்நாடு பனைபொருள் வளர்ச்சி உள்ளிட்டவற்றிற்கு மாநில அரசு ரூ.2.02 கோடி நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, பனை மரம் ஏறும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் இன்னலைக் குறைக்கும் வகையில், இத்திட்டத்தின் சிறப்பம்சமாக, எவ்வித ஆபத்துமில்லாமல், எளிதாக பனை மரம் ஏறுவதற்கு சிறந்த கருவியை கண்டுபிடிக்கும் நபர்களுக்கு 1 லட்சம் பரிசு தொகை மற்றும் தமிழக அரசு சார்பில் மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.