திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மலைகிராமமான, மலைரெட்டியூர் பகுதியில் செயல்பட்டு வரும், அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைப்பெற்ற கணினி தேர்வின் போது, 7 ஆம் வகுப்பு பயிலும் 6 மாணவிகளிடம் அப்பள்ளியின் ஆங்கில ஆசிரியர் பிரபு என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து மாணவிகள் 1098 என்ற குழந்தைகள் உதவிமையத்திற்கு தொலைபேசி மூலம் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளனர். புகாரைப் பார்த்த திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்களான , மேத்யூ மற்றும் சாதனா ஆகிய குழுவினர் சம்பவம் நடந்த அரசுப்பள்ளிக்கு உடனடியாக விரைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டதில், கணினி தேர்வின்போது 6 மாணவிகளுக்கும் தற்காலிக ஆங்கில ஆசிரியரான பிரபு பாலியல் தொல்லை கொடுத்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
சம்பந்தப்பட்ட மாணவிகள் எழுத்துப்பூர்வமாக புகாரும் கொடுத்தனர். மாணவிகள் அளித்த புகாரின் பேரில், மலைரெட்டியூர் ஆங்கில ஆசிரியர் பிரபு மீது திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் மத்தேயு வாணியம்பாடி அனைத்து மகளீர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆங்கில ஆசிரியர் பிரபுவை அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆசிரியர் மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பள்ளி மாணவிகளிடம் பள்ளி ஆசிரியர்கள் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டு வரும் சம்பவம் தொடர்ந்து நடைப்பெற்று வரும் நிலையில், தற்போது, வாணியம்பாடியில் உள்ள மலைகிராமத்திலும் பாலியல் ரீதியான குற்றத்தில் அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.