ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் 9 பேர் இன்று, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சம் பெற்றிருக்கக் கூடிய நிலையில், கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவின்போது, எடப்பாடிக்கு 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த உறுப்பினர்கள் படிப்படியாக எடப்பாடி ஆதரவு நிலைக்கு திரும்பினர். நேற்று வரை எடப்பாடி பழனிசாமிக்கு, 2,443 பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, இன்று ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் இருந்து மேலும் 9 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதன்மூலம் ஈபிஎஸ்-க்கு ஆதரவு எண்ணிக்கை 2,452ஆக அதிகரித்துள்ளது.

இதனால், ஓ.பன்னீர்செல்வத்துக்கு பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. தேனி மாவட்ட பொருளாளர் சோலை ராஜா, மகளிர் அணி செயலாளர் தனலட்சுமி, கம்பம் முன்னாள் ஒன்றிய செயலாளர் இளையநம்பி உள்ளிட்டோர் முன்னாள் எம்ல்ஏ எஸ்.டி.கே.ஜக்கையன் தலைமையில் ஆதரவு தெரிவித்தனர். இதுவரை தேனி மாவட்டத்தில் மொத்தமுள்ள 62 பொதுக்குழு உறுப்பினர்களில் 42 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.