கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை கொலை செய்து, தற்கொலை என நாடகமாடிய மனைவி மற்றும் கள்ளக்காதலன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த சந்திரவிலாசபுரம் ஊரட்சிக்கு உட்பட்ட சுந்தர்ராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் யுவராஜ் (29). இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த அவரது தாய்மாமன் மகள் காயத்ரி (25) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஜீவிதா (2) என்ற மகள் உள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று காலை வீட்டில் காயத்ரி கதறி அழுதுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, யுவராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து காயத்திரியிடம் கேட்டபோது, குடும்ப தகராறில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். மேலும், கணவன் சடலத்தை மீட்டு, அவசர அவசரமாக அடக்கம் செய்ய முயன்றார். இதனால், சந்தேகமடைந்த யுவராஜின் தந்தை ஆறுமுகம், தனது மகனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஆர்.கே.பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயத்ரியிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால், அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் கூறுகையில், ”காயத்ரி, சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் படித்து வந்துள்ளார். அப்போது, அங்கு பணியாற்றிய சீனிவாசன் (30) என்பவருடன் காதல் மலர்ந்துள்ளது. ஆனால், படிப்பு முடிந்ததும் தாய்மாமன் மகன் யுவராஜுக்கு காயத்ரியை திருமணம் செய்து வைத்துள்ளனர். அதன்பிறகு, திருத்தணி தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியில் சேர்ந்த காயத்ரிக்கு, மீண்டும் காதலன் சீனிவாசனுடன் தொடர்பு ஏற்பட்டது. பின்பு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. அவருடன் நீண்ட நேரம் செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால், காயத்ரியின் நடத்தையில் சந்தேகமடைந்த யுவராஜ், காயத்ரி வேலைக்குச் செல்வதையே நிறுத்திவிட்டார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தனது கள்ளக்காதலுக்கு முட்டுக்கட்டையாக இருந்த யுவராஜை தீர்த்துக்கட்ட கள்ளக்காதலனுடன் சேர்ந்து காயத்ரி திட்டம் போட்டுள்ளார்.
அதன்படி, சம்பவத்தன்று வீட்டில் யுவராஜ் தூங்கிக் கொண்டிருந்தபோது காயத்ரி, கள்ளக்காதலன் சீனிவாசனை வீட்டிற்கு அழைத்துள்ளார். அவர், தனது கூட்டாளிகளான மணிகண்டன் (28), ஜில்லு (22) ஆகியோருடன் ரகசியமாக காயத்ரி வீட்டிற்கு வந்து, யுவராஜை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர், அதை தற்கொலை என ஊர் மக்களை நம்ப வைப்பதற்கு, சடலத்தை தூக்கில் தொங்கவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். மறுநாள் காலை கணவர் தற்கொலை செய்து கொண்டதாக காயத்ரி நாடகமாடியுள்ளார்” என தெரிவித்தனர். இதனையடுத்து, காயத்ரி, சீனிவாசன், மணிகண்டன், ஜில்லு ஆகியோரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.