பெங்களூர், புறநகர் ஆனேக்கல் தாலுகாவை சேர்ந்தவர் சுரேஷ்(48). இவரது மனைவி ஷாலினி. இருவரும் தனியார் கார்மென்ஸ்டில் வேலை பார்த்து வந்தனர். சுரேஷ் குடிபோதைக்கு அடிமையானதால் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துவந்துள்ளார். இந்நிலையில் சம்பத்தன்று குடித்துவிட்டு வந்த அவர், சிக்கன் கபாப் செய்யும்படி மனைவியிடம் கூறியுள்ளார்.
மனைவி ஷாலினியும் அவருக்கு சமைத்து கொடுத்தார். அப்போது கபாப்பில் காரம் குறைவாக இருந்ததாக கூறி கோபத்துடன் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். அது மட்டுமல்லாமல் கோபத்தில் இருந்த சுரேஷ் வீட்டில் இருந்த கத்தியால் மனைவி ஷாலினியை குத்தியுள்ளார், மேலும் உருட்டுக்கட்டையால் தாக்கினார். இதனால் பலத்த காயமடைந்த ஷாலினி மயங்கி விழுந்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த பக்கத்தில் இருந்தவர்கள் ஷாலினியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஆனேக்கல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையில் தான் தாக்கியதில் மனைவி இறந்துவிட்டதாக நினைத்து பயந்துபோன சுரேஷ், மைலசந்திராவில் ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று முன்தினம் இந்த தற்கொலை குறித்து பன்னரகட்டா காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பன்னரகட்டா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.,