பிரேசிலில் பெண் ஒருவர் மரணமடைந்த உறவினரை வங்கிக்குக் அழைத்து சென்று கடன் பெற முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலில் பெண் ஒருவர், தனது 68 வயதான உறவினரை வங்கிக்கு கடன் பெறுவதற்காக சக்கர நாற்காலியில் அழைத்து வந்துள்ளார். அவர் சக்கர நாற்காலியில் வரும்போதே தலை தொங்கியிருந்தபடி இருந்துள்ளார். கடன் பெற சக்கர நாற்காலியில் அழைத்து வந்த நபர் கையெழுத்துப் போடும்போது மரணமடைந்ததாக வங்கி ஊழியர்கள் கருதினர்.
இதனால், ரியோ டி ஜெனிரியோ வங்கி ஊழியர்கள், அவசர உதவி சேவை மையத்தைத் தொடர்புகொண்டு உதவிக்கு அழைத்தனர். அவசர உதவி ஊழியர்கள் வந்து பரிசோதித்ததில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். உடனடியாக காவல்துறையினர் விரைந்து வந்து அப்பெண்ணைக் கைது செய்தனர். இறந்தவரின் பெயரில் கடன்பெற்று மோசடியில் ஈடுபட முயன்றதாக அப்பெண் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகியிருக்கிறது.