அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற கூலி தொழிலாளி அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை 10ம் வகுப்பு படித்ததிலிருந்து தன்னை காதலிக்க சொல்லி வற்புறுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தற்சமயம் அந்த சிறுமி 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்திருக்கிறார். இந்த நிலையில், ஜெயக்குமார் தொடர்ச்சியாக அந்த சிறுமியிடம் தன்னை காதலிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது.
அந்த சிறுமியை தன்னுடைய இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்ற ஜெயக்குமார் அவருக்கு சொந்தமான காட்டுப் பகுதியில் இருக்கின்ற ஒரு தனி வீட்டில் வைத்து, கடந்த 10 தினங்களாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு ஜெயக்குமாரின் தாயார் சாந்தியும் உடந்தையாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தங்களுடைய மகளைக் காணவில்லை என்று ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர். இந்த நிலையில், 10 தினங்களுக்கு பின்னர் சிறுமி வீட்டிற்கு வருகை தந்துள்ளார். மேலும் யாருடனும், எதுவும் பேசாமல் இருந்து வந்த சிறுமியிடம் பெற்றோர் இது குறித்து விசாரித்திருக்கிறார்கள்.
இதற்கு அந்த சிறுமி, ஜெயக்குமார் தன்னை அவருடைய இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று முந்திரி காட்டில் இருக்கின்ற ஒரு தனி வீட்டில் வைத்து தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்திருக்கிறார். இதனை கேட்டு அதிர்ச்சிக்குள்ளான பெற்றோர், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் வழங்கினர்.
இந்த புகாரினடிப்படையில் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சுமதி சிறுமியை காதலிக்க சொல்லி, வற்புறுத்தி கட்டாயப்படுத்தி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஜெயக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அத்துடன் அவர் செய்த தவறுக்கு துணை போன ஜெயக்குமாரின் தாயார் சாந்தியையும் காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள். இதனையடுத்து ஜெயக்குமார் ஜெயங்கொண்டம் கிளைச்சிறைக்கும், அவருடைய தாயார் சாந்தி திருச்சி பெண்கள் தனி சிறைக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.