தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜிஎஸ்டி வரி குறித்தும் மத்திய அரசு குறித்தும் கடுமையாக விமர்சித்து, “X” வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில், “GST: வரி அல்ல… வழிப்பறி! “தன் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும்” என்று முதலமைச்சராக எதிர்த்த திரு. நரேந்திர மோடி, பிரதமரானதும், “ஜி.எஸ்.டி பொருளாதாரச் சுதந்திரம்’’ என்று ‘ஒரே நாடு ஒரே வரி’ கொண்டு வந்தார்.
பேச நா இரண்டுடையாய் போற்றி! ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா? ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், Bill-இல் உள்ள GST-யைப் பார்த்து #GabbarSinghTax எனப் புலம்புகின்றனர்! அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் GST கட்ட வேண்டுமா? 1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ.க.வால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜி.எஸ்.டி-யில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜி.எஸ்.டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜி.எஸ்.டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள். ஏழைகளைச் சுரண்டும் இந்த முறையை மாற்ற இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
இன்றைய தினம் சற்று நேரத்திற்கு முன்பு தான் ANI செய்தி நிறுவனத்திடம் பிரதமர் மோடி அளித்த பேட்டியில் திமுகவை கடுமையாக சாடியிருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசு குறித்து முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.