செவ்வாய் கிரகத்தில் நீர் இருந்ததற்கான தெளிவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
விண்வெளி தொடர்பாகவும், மற்ற கிரகங்கள் தொடர்பாகவும் நாசா விண்வெளி ஆய்வு மையம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.. அந்த வகையில் செவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பிய கியூரியாசிட்டி ரோவர், செவ்வாய் கோளின் பல்வேறு பகுதிகளில், 2014ம் ஆண்டு முதல் ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. மேலும் செவ்வாய் கிரகத்தை தொடர்ந்து படம்பிடித்து அனுப்பி வருகிறது.. மேலும் ‘மவுன்ட் ஷார்ப்’ எனப்படும் மிகப் பெரிய மலை மீது கியூரியாசிட்டி ஆய்வு செய்து வந்தது. இந்த மலை பல கனிமங்களால் உருவானது என்பது தெரியவந்துள்ளது..
இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் ஒரு ஆறு இருந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. 18,000ம் அடி உயரமுள்ள இந்த மலையின் மறுபக்கத்துக்கு கியூரியாசிட்டி சென்றுள்ளது. அங்கு, பல நுாற்றாண்டுகளுக்கு முன்பு ஆறு ஓடியதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. இது குறித்து நாசாவின், கியூரியாசிட்டி திட்ட மூத்த விஞ்ஞானியான அஸ்வின் வசவாடா பேசிய போது “ செவ்வாய் கிரகத்தில், முன்னொரு காலத்தில் ஆறு ஓடியுள்ளதற்கான ஆதாரங்கள் தற்போது கிடைத்துள்ளன.
இது, நம் ஆய்வில் கிடைத்துள்ள புதிய தகவலாகும். அதாவது ஒரு ஆறு ஓடி, வறண்ட பின், அந்தப் பகுதியில் மணல் உள்ளிட்டவற்றை அரித்து சென்ற தடங்கள் தெரியும். இதுபோன்ற தடங்கள் தற்போது கிடைத்துள்ளன. செவ்வாயில், பல நுாற்றாண்டுகளுக்கு முன், நீர் மட்டுமல்ல, ஆறு ஓடியுள்ளது என்பதை இது நிரூபிக்கும் வகையில் உள்ளது. நாங்கள் இதுவரை பார்த்த நீர் மற்றும் அலைகளின் சிறந்த சான்று இதுவாகும். இது போன்ற சான்றுகள் இதற்கு முன்பு கிடைத்ததில்லை..” என்று தெரிவித்தார்..