சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா. கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் தனுஷின் மனைவியும், ரஜினியின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா வீட்டில் வைத்திருந்த தங்க, வைர நகைகளைக் காணவில்லை என தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ஐஸ்வர்யா வீட்டு பணிப்பெண்களான ஈஸ்வரி, லட்சுமி, கார் டிரைவர் வெங்கடேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் வெங்கடேசன் இருவரும் ஐஸ்வர்யாவின் வீட்டிலிருந்து திட்டமிட்டு நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா தனது சொகுசு காரின் சாவி தொலைந்துவிட்டதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தனது கணவர் முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்ற நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு விசாகன் வணங்கா முடியை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு வேத், வீர் என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கார் சாவி தொலைந்தது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.