இந்தியாவில் ஓராண்டுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை தாண்டி வரலாறு காணாத அளவுக்கு விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நடவடிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக எரிப்பொருளை கண்டுபிடித்ததாக கூறி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் ராமர்பிள்ளை.
இன்று இல்லை 20 ஆண்டுகளுக்கு முன்னரே, தான் குறைந்த விலையில் மூலிகை பெட்ரோல் தயாரித்துள்ளதாக கூறினார். பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில், 15 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் தருவேன் என்றும் கூறினார். இந்நிலையில், தற்போது நீதிமன்றத்தில் தனக்கு சாதகமான தீர்ப்பு வந்ததாக கூறி அவர் மீண்டும் களத்தில் இறங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் மூலிகை பெட்ரோல் தயாரிப்பாளரான ராமர் பிள்ளை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”23 ஆண்டுகளுக்கு முன்னர் தான் கண்டுபிடித்த மூலிகை பெட்ரோல் போலியானது என்று சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடர் சட்டப்போராட்டத்திற்கு பிறகு வழக்கில் தாம் வெற்றி பெற்றுள்ளேன். மூலிகை பெட்ரோல் உண்மை என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறிய பின்பும் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதற்கான உபகரணங்களை என் கையில் கொடுக்காமல், நீதிமன்றம் சொன்ன பணத்தையும் என் கையில் கொடுக்காமல் சிபிஐ காலம் தாழ்த்தி வருவதாக குற்றம்சாட்டினார். எனவே, இந்த விவகாரத்தில் முதலமைச்சர், பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
முதலமைச்சர் முன்னிலையில் மீண்டும் மூலிகை பெட்ரோல் செய்து காட்ட தயார். மூலிகை பெட்ரோலை வெற்றிகரமாக பரிசோதனை செய்து காட்ட தவறினால் எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள் என்றும் தெரிவித்தார். இதனை அனைத்து தொலைக்காட்சியிலும் நேரலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், இதுவே எனது கடைசி செய்தியாளர் சந்திப்பாக கூட இருக்கலாம். எனது உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் என்ன வேணாலும் நடக்கலாம், என்று கூறியப்படி கண்கலங்கினார்.
தனக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தாலும் நான் நிம்மதியாக இல்லையென கூறியவர், மூலிகை பெட்ரோல் தயாரிப்பு வழிமுறைகளைக் கேட்டு பல்வேறு தரப்பிலிருந்து என் உயிருக்கு அச்சுறுத்தல் வருவதாகவும் என் உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறினார்.