ஆலப்புழா-தன்பாத் விரைவு ரயில் நாளை முதல் டிசம்பர் 8-ம் தேதி வரை 23 நாட்களுக்கு கோவைக்கு செல்லாது என்று சேலம் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து தினமும் காலை 6 மணிக்கு புறப்படும் ஆலப்புழா – தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில், மூன்றாவது நாள் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் சென்று சேரும். இந்த ரயில் கோவைக்கு மதியம் 12.20 மணிக்கும், திருப்பூருக்கு மதியம் 1.10 மணிக்கும் வந்தடையும்.
நாளை (நவ.16-ம் தேதி) முதல், டிசம்பர் 8-ம் தேதி வரையிலான 23 நாட்கள் போத்தனுார் – கோவை இடையே பொறியியல் மேம்பாட்டு பணிகள் நடக்கிறது. இதனால், ஆழப்புழா – தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் பாலக்காட்டில் இருந்து கோவை வரும் வழியில் போத்தனுாரில் நிறுத்தப்படுகிறது. போத்தனுாரில் இருந்து இருகூர் வழியாக திருப்பூர் வந்து சேரும் இந்த ரயில், இந்நாட்களில் கோவை ஸ்டேஷன் செல்லாது என, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.